பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். .
ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மெகா வாசனா பரிசளிப்புக்கு குறித்த ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பு உண்மையென நம்பி தனது மக்கள் வங்கி கணக்கிலக்கத்தையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் அந்த ஆசிரியர் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலை வழங்கிய சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் மீளப் பெறப்பட்டதாக தொலைபேசி குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது.
தாம் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த ஆசிரியை தமக்கு ஏற்பட்ட அவல நிலையை வாட்ஸ்அப்பில் குரல் பதிவுவிட்டு, தனக்கு நேர்ந்ததை பகிர்ந்து, ஏனைய நபர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .
பதுளை பகுதியில் ஆசிரியர்களை இலக்கு வைத்து இவ்வாறு பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பண்டிகை காலத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.