சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 வகை துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபரொருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (31) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரம் இல்லாத 'பொரதொளகாய் சொட் கண்' வகை துப்பாக்கியும், ரி-56 வகை துப்பாக்கியின் 10 ரவைகளும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் வழிகாட்டுதலில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இது மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.