சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்று : உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு !



பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய அம்பாறை - சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட உணவகத்தில் வெள்ளிக்கிழமை (25) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உடனடியாக செயல்பட்டு உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இதன்போது உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர், ஜே. மதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.