சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 10ஆம் திகதி வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கபோவதில்லை.
அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகின என்றார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவரது சமூக பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சிலர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களாக இருந்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.