ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை



எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க கடந்த 10 ஆம் திகதி சாமர சம்பத் தசநாயக்கவின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனவே, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.