இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் மோசடி - கோபா குழு


வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில், இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கோபா குழுவில் ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் நிதிச்சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கையில் இது தெரியவந்ததாக அவரை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப் பகுதியில் 1,077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்கு இரண்டு பிரதான நிறுவனங்கள் இறக்குமதிக்கான வசதிகளை வழங்கும் நிறுவனங்களாகச் செயற்பட்டுள்ளதாகவும் அனுமதிப்பத்திரம் வழங்குதல் என்ற போர்வையில் வணிக நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விலக்கு எல்லை 6 மில்லியன் ரூபாவிலிருந்து 12 மில்லியன் ரூபாய் வரை உயர்த்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் கோபா குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டுக்குச் சென்றிராத நபர்கள் நான்கு பேருக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக் குறைந்தது வெளிநாட்டில் இருக்க வேண்டிய கால அளவு சுற்றுநிருபத்தில் சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை.

இதனால் 3 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய நபர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.