சொத்து கொள்வனவொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சி.ஐ.டி யினர் இன்று திங்கட்கிழமை விசாரணைகளை நடத்தினர்.
திங்கட்கிழமை (07) முற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
சொத்துக்களை கொள்வனவு செய்ய பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிடத் தவறியதன் மூலம் கருப்பு பண பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.மேலும் இது தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு அங்கமாக டெஸி பொரஸ்ட் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சி.ஐ.டி யினர் நேற்று இந்த விசாரணைகளை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் நேற்றுமுற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு வருகை தந்ததுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறிருந்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கேள்வி-நீங்கள் சி.ஜ.டி க்கு எதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்கள்?
பதில்- டெஸி பாட்டி தொடர்பில் விடயங்களை அறிந்து கொள்வதற்காக சி.ஜ.டி க்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தெரிந்தவற்றை கூறி விட்டு செல்லாம் என வந்துள்ளேன்.
கேள்வி- இதற்கு முன்னரும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தீர்கள் அல்லவா?
பதில் - எனக்கு சி.ஐ.டி, வீடாக மாறி விட்டது.அதாவது தற்போது நான் அடிக்கடி வந்து போகும் இடமாக மாறியுள்ளது.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் எம்மை சி.ஐ.டிக்கு அழைக்கிறார்கள். இங்கு அடிக்கடி வருகிறோம். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கி விட்டு செல்கிறோம்.
கேள்வி- தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.உங்களை சி.ஐ.டிக்கு அழைப்பது தேர்தலில் நெருக்கடியை ஏற்படுத்தும் அல்லவா?
பதில் - இது எமக்கு பெரிய விடயமல்ல. தமக்கு வாக்களிக்கவில்லை இல்லை என்றால் பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுக்கிறார்.இது பாரிய அச்சுறுத்தல் அல்லவா? சி.ஐ.டிக்கு எம்மை அழைப்பது சாதாரண விடயமாகும்.எம்மை சிறையில் அடைப்பதால் எமது தேர்தல் பிரசாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியில் வைப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றார்.