நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு !


நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாவ பகுதியில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ச.தொ.ச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம்.

எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்.

இதேவேளை, அமெரிக்கா அறிவித்துள்ள வரி, இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை மூலம் இந்த விடயத்தில் நிவாரணத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கு அனுப்பப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை மாற்றுவதற்குத் தயாரெனத் தெரிவித்துக் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.