ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு”, “கைது செய் போதை குற்றவாளியை கைது செய்”, “போதைப்பொருளை ஒழிப்போம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து, நிலைமை தொடர்பாக ஆராய்ந்து, இவ்விடயத்தில் கவனம் செலுத்தியதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் தொடர்புகொண்டு வினவப்பட்டபோது தெரியவருவதாவது:
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி குறித்த தோட்டப் பகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு, மூதாட்டி தனிமையில் வீட்டில் இருந்த வேளையில், மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளான்.
பின்னர், இளைஞன் மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.