சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது


2025 ஆம் ஆண்டில் மார்ச் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த நபர்கள் மண்டைத்தீவு, வாழச்சேனை, சுண்டிக்குளம், நவற்காடு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மீன்பிடித்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட பல விடயங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 45 சட்டவிரோத வலைகள், 50,005 கடலட்டைகள், 13 டிங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான சுழியோடி உபகரணங்களை மேற்படி கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மீன்வள ஆய்வு அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.