
( வி.ரி. சகாதேவராஜா)
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என் தொடர்பாக தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடகமாநாட்டில் அவ் விடயத்தை நிரூபிக்கட்டும் . நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன்.
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் தான் தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுதலித்து காரைதீவில் உள்ள அம்பாறை ஊடக அமையத்தில், இன்று வியாழக்கிழமை (06) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
அவருக்கு பாராளுமன்ற சிறப்பு உரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கின்றார். எனக்கும் அவருக்கும் இடையிலே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க இவ்வாறு என்னை இழுத்து இருக்கின்றார் .
அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய்யை சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டட்டும்.
மொத்தத்தில் அவர் முடிந்தால் முதுகெலும்பு இருந்தால் அந்த சுதாவையும் காட்டி நான் ஹீல்டன் ஹோட்டலில் போன சான்றுகளையும் நிரூபிக்கட்டும்.
பாராளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
இது தொடர்பாக போலீஸ் மா அதிபரிடம் நான் மனுவை அளிக்கவிருக்கிறேன். என் தொடர்பாக அவர் சொன்னதை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறானது ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும். என்று சவால் விட்டார்.