மட்டக்களப்பில் விவசாயிடம் இலஞ்சம் வாங்கிய அரச உத்தியோகத்தர் கைது
விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும் , மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதாகவும் கூறி அதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் அவர்களின் ஆலோசனைக்கமையவும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்த நிலையிலும் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் இருந்துள்ளார். விவசாயிடம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போதே அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.