குரங்குகளை தீவுக்கு அனுப்ப தீர்மானம் !



பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து தீவு ஒன்றில் உட்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கு 100 இலட்சம் ரூபாயை வழங்க மத்திய மாகாணசபை தீர்மானித்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டுத் தொகையானது மத்திய மாகாணசபையினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண சபையின் பொதுச் செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்துள்ளார்

அதன்படி குரங்குகளை பிடிக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாய , கால்நடை , மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி லால்காந்த தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பஹத்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 15 பிரதேசங்களில் உள்ள குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து ரந்தெனிகல நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் உட்படுத்துவற்கான செயற்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டத்திற்கான பொறுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்துள்ளார்.