பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக நிவாரணப் பொதி : அஸ்வெசும விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை !


பண்டிகை காலத்தை முன்னிட்டு ச.தொ.ச. விற்பனை நிலையங்கள் ஊடாக 5000ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய பொதி 2500 ரூபாவுக்கு வழங்கப்படும். ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுக்காக புதிதாக விண்ணப்பித்துள்ள 8,70,000 பேருக்கு நிவாரண பொதி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படுமென வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொதிகளை நிவாரண விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒதுக்கீட்டை 1500 மில்லியன் ரூபாவாக மாற்றியமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதற்கான திருத்தம் நாளை வியாழக்கிழமை (20) நிதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் முன்வைக்கப்படும்.

17 இலட்சம் பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறுகிறார்கள். 870000 பேர் நலன்புரி கொடுப்பனவுக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள்.

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதி 2500 ரூபா நிவாரண விலைக்கு வழங்கப்படும்.

இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாடு அரிசி, பெரிய வெங்காயம் 2 கிலோகிராம், உருளைக்கிழங்கு 2 கிலோகிராம், பருப்பு ஒரு கிலோகிராம், டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 3 கிலோகிராம், கோதுமை மா 2 கிலோகிராம், சமபோசா 2 பெக்கட், 4 சோயா மீட் பக்கட் உள்ளடக்கப்படும்.

நிவாரண பொதி வழங்குவதற்கு உரிய விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனுக் கோரல் செய்யப்பட்டுள்ளது.திறைச்சசேரியிடம் முற்பணம் கோரியுள்ளோம்.

இந்த நிவாரண பொதி வழங்கலில் அஸ்வெசுன நலன்புரி கொடுப்பனவுக்காக புதிதாக விண்ணப்பித்துள்ள 8,70,000 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.