
இன்று (27) முதல் 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நுளம்பு ஒழிப்பு திட்டம், நுளம்பு அடர்த்தி அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அவதான நிலைமையைக் கருத்தில் கொண்டு, விசேட நுளம்பு ஒழிப்பு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்கள் இதன்போது சோதனை செய்யப்படவுள்ளது.
தங்கள் வளாகங்களுக்குள் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார பிரிவினர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.