மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு - மூவர் கைது


மன்னார் பொலிஸ் பிரிவிகுட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் நேற்று சனிக்கிழமை (15) கைப்பற்றியுள்ளதுடன், திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணையின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் மன்னார் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 28,29 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.