நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) நாளை திங்கட்கிழமை (17) ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறும், இதன் போது எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதிக்குள் மேலதிக வகுப்புக்கள் எவையும் நடத்தப்படக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.