மட்டக்களப்பைச் சேர்ந்த அலெக்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் என்பவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றுக்குள் குறித்த அலெக்ஸ் என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று (11) புகுந்து பிள்ளைகள் ஏன்? இன்றையதினம் (11) குறைவாக வந்துள்ளார்கள், என்ன காரணம், என கேட்டு அங்கிருந்த பாலர் பாடசாலை ஆசிரியையுடன் தர்க்கம் புரிந்து, தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியை இவரின் நடவடிக்கையை வீடியோ செய்துள்ளார். இந்நிலையில், நீங்கள் எடுத்த வீடியோவை வெளியிட்டால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவேன் என்றும் அலெக்ஸ் எச்சரித்துள்ளார்.
அலெக்ஸின் செயற்பாடுகளை தனது கைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியையை அலெக்ஸ் தாக்க முற்பட்டுள்ளார்.. அதன்போது அலெக்ஸின் கை விரல் நகம் ஆசிரியையின் கையில் கிழித்து உள்ளது என குறித்த ஆசிரியை தெரிவிக்கின்றார். இந்நிலையில் ஆசிரியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக அலெக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது இவ்வாறு இருக்க குறித்த ஆசிரியை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலெக்ஸாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் மாத்தளையைச் சேர்ந்தவர் என்றும், தான் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்பட்டு தேசிய மக்கள் சக்திக்கான அதனையும் துறந்துவிட்டு மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி மக்களுக்காக வந்து சேவை செய்து வருவதாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இப்பகுதியில் அக்கட்சிக்காக செயற்பட்டு வந்தவராவார்.
பட்டிருப்பு தொகுதிக்குரிய தமது கட்சியின் அமைப்பாளராக தவஞானசூரியம் என்பவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார் அலெக்ஸ் என்பவர் தமது கட்சியின் அ தொகுதிக்குரிய அமைப்பாளர் இல்லை மாறாக எமது கட்சிக்காக தேர்தல் காலத்தில் அங்கு வந்து வேலை செய்பவர்தான் அலெக்ஸ். ஆனால் அவரை தேர்தல் முடிந்த கையோடு அவருடைய மாவட்டத்திற்கு அவரை அனுப்பி வைத்துவிட்டோம் அதனையும் கடந்து அவர் இப்பகுதியில் நின்றுள்ளார், என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க அலெக்சாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் பட்டிப்பு தொகுதிக்காக உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர் இல்லை அவர் தன்னிச்சையாக தொகுதிக்கு வந்து செயல்பட்டு வந்ததாக அக்கட்சியைச் சேர்ந்த மற்றுமொருவர் தெரிவித்தார்.