
சிங்கள பௌத்த நாட்டில் திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம்புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் இனவாதிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
இனவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?, ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்ப அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு. ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது.
இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது.
வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது.வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா என்று எண்ணத்தோன்றுகிறது.இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளியை உற்சவம் நடத்தப்படுகிறது.
அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போசிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.