முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்றபோது குறித்த சந்தேகநபரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஆவார்.
இவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளராக இருந்த போது ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான பின்னர் கிராம சேவையாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.