நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர்களில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதேபோல், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் மக்கள்தொகையில் 20% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 41% பேர் சிகிச்சை பெறுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மை சுகாதார சேவை முறைமையின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள “முதன்மை சுகாதார சேவை முறைமை அபிவிருத்தி திட்டத்தை” அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.