நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 6 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் இடம்பெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இம்மாதம் 22 ஆம் திகதி எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. எனினும் 23 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அலுவிஹாரயிலிருந்து பலாபத்வல சந்தி வரையிலான வீதிகளில் வேட்பாளர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாத்தளை ரத்தொட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கைக்காவல முதல் ரத்தோட்டை வரையிலான வீதியில் அரசியல் கட்சிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டமை மற்றும் வேட்பாளர்களின் படங்கள் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இரு முறைப்பாடு பதிவாகியுள்ளன.
மேலும், அனுராதபுரம் கெப்பித்திகொள்ளாவ மதவாச்சி பகுதியில் இலவசமாக உலர் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் ஒருவர் பொலன்னறுவை பிரதான வீதியில் தெருவிளக்குகளை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹார மாவத்தை, மொனராகலை வீதியில் வேட்பாளர் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.