சம்மாந்துறைமனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்பு ; ரூ. 20 ஆயிரம் தண்டம் !



சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் அறவிடப்பட்டது.

கிடைத்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் எம்.எம். நௌசாத்தின் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை 01 பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் டி. தினேஷினால் குறித்த குளிர்பானம் கைப்பற்றப்பட்டு அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் குளிர்பானம் தொடர்பான அறிக்கையில் அனுமதிக்கப்படாத நிறமூட்டியினையும் ( Tartrazine - INS 102), அனுமதிக்கப்படாத பாதுகாக்கும் இரசாயனத்தையும் (Benzoic acid) கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை உரிமையாளர், அதனை உற்பத்தி செய்தவரையும் ஆஜர் படுத்திய போது இருவருக்கும் எதிராக ரூபாய் 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.