தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகள் மீது பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் - சந்தேக நபர் கைது




குருணாகல் நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 10 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் குருணாகல் தலைமையக பொலிஸாரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அந்நிறுவனத்தின் அதிபராகவும் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து குருணாகல் பிரதேசத்திற்குச் சென்று குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்து கல்வி கற்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவிகளால் குருணாகல் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை கொடுத்து கல்வியை வழங்கும் நோக்கத்தில் இந்த தனியார் கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் வேறொரு விடுதியிலும், மாணவிகள் சந்தேக நபரின் கண்காணிப்பின் கீழ் உள்ள விடுதி ஒன்றிலும் தங்கியிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இதற்கு முன்னர் கண்டி பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய காலத்தில் இவ்வாறு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.