களுவாஞ்சிகுடி - பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து இன்று வியாழக்கிழமை(06) பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் இன்றைய தினம் அதிகாலை மீன் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

மீன் பிடிக்கச் சென்றவர் பகல் வேளையாகியும் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர் நீர் நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நீர் நிலையிலிருந்த சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.