ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு உத்தரவு !



வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவத்துக்கு எதிரான வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்து வந்தநிலையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை (10) காலை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரான ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

பின்னர் மனுவொன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, அந்த பிடியாணையை திரும்பப் பெற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.