70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோருக்கு பெப்ரவரி மாதத்தில் 3,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2024 முதல், அஸ்வெசும குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்காக நலன்புரி நன்மைகள் சபை ஊடாக நேரடியாக SLIPS முறை மூலம் அஸ்வெசும கணக்குகளில் குறித்த உதவித்தொகை வரவு வைக்கப்படும் என சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, அஸ்வெசும குடும்பங்களில் உள்ள முதியவர்களை தவிர்த்து, இதுவரை உதவித்தொகை பெற்று வரும் முதியவர்களுக்கு மட்டுமே தபால்/உப தபால் அலுவலகங்கள் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக, கடந்த காலத்தில் குறிப்பிட்ட திகதியில் முதியவர்களுக்கு உதவித்தொகையை செலுத்த முடியாததால், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பிப்ரவரி 20 ஆம் திகதி முதல் தபால்/ உப தபால் அலுவலகங்கள் மூலம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.