இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது !


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபர் 35 வயதுடையவர் ஆவார்.

இவர் மலேசியாவிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.