வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து விசேட அறிவிப்பு !



வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் வாகன உரிமையாளருக்குச் சொந்தமான வாகனம் இதற்கு முன்னர் வேறு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த மாகாணத்தில் வருமான அனுமதிப் பத்திரம் பெறும் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிக்கும் மிகவும் கடினமான பணியாக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த சிரமம் தொடர்பில் கவனம் செலுத்தி மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு மேல்மாகாண ஆளுநருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.