திருக்கோவில் வலய முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின நிகழ்வு !

(வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் வலய முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின நிகழ்வும், கடந்த முப்பது வருடங்களுக்கு மேலான சேவையைச் செய்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் அளப்பரிய சேவை நலன் பாராட்டு நிகழ்வும் திருக்கோவில் காஞ்சிரங்குடா வள நிலையத்தில் நேற்று முன்தினம் (14) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவில் வலய முன்பள்ளி பாடசாலைகள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நிமலரஞ்சன் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட முன்பள்ளிகளில் கடமையாற்றும் 170 முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடந்த 30 வருட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்ற எட்டு ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் . முன்பள்ளி ஆசிரியர்களுக்கு என்று ஒரு ஆசிரியர் தின நிகழ்வு சமகாலத்தில் நடைபெற்றது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.