வீட்டை விட்டு வெளியே சென்ற பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம் மீட்பு ! நண்பி பொலிஸாரின் பாதுகாப்பில்


 பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரு பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம் இன்று லொக்கல்ல ஓயாவில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவியின் நண்பி பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பதளை - கந்தேகெதர பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய திலினி உபேக்ஷா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருமாணவிகளும் கடந்த 20ஆம் திகதி பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த வேளையில் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சம்பவத்தன்று சடலமாக மீட்கப்பட்ட மாணவி மற்றுமொரு மாணவியுடன் இணைந்து பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

வெளியே சென்ற மாணவிகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த மாணவிகள் தங்களின் புத்தகங்களை எங்களை தேட வேண்டாம் என்பதன் அடிப்படையில் கடிதங்களையும் எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மாணவியை ரிதிமாலியத்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.