அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !


அரிசி, கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுகள் தொடர்பில் நிலவும் சந்தைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (22) சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை தொடரும் என தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது தேங்காய் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க சபை திட்டமிட்டுள்ளது.

மேலும், முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.

சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ அல்லது கையிருப்பு வெளியிடுவதில் தடையாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் 28 முதல் 32 ரூபாய் வரை இருந்த முட்டையின் விலை தற்போது 40 ரூபாயை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.