மனைவியின் தகாத உறவு கத்தியால் குத்திய கணவர் !


டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (09) புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய மூன்று பிள்ளையின் தாயொருவரே கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை (08) மாலை கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவனிடம் மனைவி தொழிலுக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்று அன்றிரவு தங்கி உள்ளார். எனினும் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதிலிருந்து புதன்கிழமை காலை வரை மனைவியிடம் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வராத காரணத்தால் காலை 8 மணியளவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் திடீரென அதே பகுதியை சேர்ந்த முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, காதலன் தொழிலுக்குச் சென்ற நிலையில் மனைவி படுக்கை அறையில் இருந்ததை அவதானித்த கணவன் மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவன் டயகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.