அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !

(வி.ரி.சகாதேவராஜா)


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு
காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.

ஆசன ஒதுக்கீடு சின்னம் பற்றி ஓரிரு நாளில் தெரியவரும்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்தனர் .

கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தொடரந்து ஒரு மணி நேரம் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றைய அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர்.

இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை என்று இணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்.

எமக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கிடைத்தது. அதாவது சங்கு சின்னத்தில் பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானதாகும். நாம் தமிழர்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்பதை உலகிற்கு சொல்லியிருக்கிறோம்.

அதே ஒற்றுமையை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஒன்றாக பயணிப்போம் என்பதை கூறவேண்டும். திருகோணமலையிலும் இதே ஒற்றுமை ஆயர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆரம்பம் வெற்றி. இனி பொதுச் சின்னம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் ஓரிரு நாட்களில் கலந்து பேசி முடிவுக்கு வரவுள்ளோம். என்றார்.