உலக முடிவிலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு !


இருவரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு சிறிய உலக முடிவிலிருந்து கீழே வீசப்பட்ட இளைஞனின் சடலம் இன்று (16) இராணுவ கொமாண்டோ படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதி இக்கொலை இடம்பெற்றுள்ளதாக மடுல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஹாலியெல ரொசெட்வத்தையைச் சேர்ந்த விவேகானந்தன் சுஜீவன் என்ற திருமணமாகாத 23 வயதான முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் 16 நாட்களுக்குப் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இரவு இந்த முச்சக்கரவண்டி சாரதி மடோல்சிம, படவத்தை பகுதியில் உள்ள ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்ததாகவும், அந்நபர் இவருக்கு மாணிக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை விற்க செல்லவுள்ளதாகவும் கூறி முச்சக்கரவண்டி சாரதியை மடுல்சிம நகருக்கு வரவழைத்து மற்றுமொரு நபருடன் இணைந்து சிறிய உலக முடிவிடத்திற்கு அருகில் உள்ள வீதியில் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள மாணிக்கம் மற்றும் தங்கத்தை எடுக்கச் செல்வதாக கூறி முச்சக்கர வண்டி சாரதியை அழைத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் 34 வயதுடைய பிரதான சந்தேகநபர் அவரிடமிருந்து வாங்கிய முச்சக்கரவண்டியை மீண்டும் தருமாறு கோரியதுடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து முச்சக்கரவண்டி சாரதியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சிறிய உலக முடிவிடத்திலிருந்து பள்ளத்தாக்கில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில நாட்களாகியும் மகன் வீட்டிற்கு வராததால், தனது மகனைக் காணவில்லை என தந்தை ஹாலிஎல பொலிஸில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இக்கொலையின் பிரதான சந்தேகநபரான ஹலிஎல, குயின்ஸ்டவுன் வத்தையைச் சேர்ந்த பெண் ஒருவரை மணம் முடித்துள்ள, தற்போது மடுல்சிம பட்டாவத்தையில் வசிக்கும் 34 வயதுடைய சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மடுல்சிம பட்டாவத்தையில் வசிக்கும் 24 வயதுடைய வாகன தரகரான மற்றைய சந்தேகநபரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் முச்சக்கரவண்டியை சந்தேகநபர்கள் பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்த நிலையில் தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.

மடுல்சிம பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இராணுவ கொமாண்டோ படையணி படையினர், சிறிய உலக முடிவிலிருந்து சுமார் 450 அடி பள்ளத்திலிருந்து இளைஞனின் சடலத்தைக் கண்டுபிடித்து, சவால்களுக்கு மத்தியில் சிறிய உலக முடிவின் மேற் பகுதிக்கு கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர்.