தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்: வடக்கு, கிழக்கில் கன மழை !



எதிர்வரும் 13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது 15.10.2024 அன்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதன் பின் 18.10.2024 அல்லது 19.10.2024 அளவில் தமிழ் நாட்டின் வடக்கு பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாஅறிவித்துள்ளார்.

இத்தாழமுக்கத்தோடு இவ்வாண்டுக்கான வடகீழ் பருவக்காற்றின் உடைவும் ஏற்படும்.

எனவே எதிர்வரும் 13.10.2024 முதல் 20.10.2014 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இத்தாழமுக்கத்தோடு இணைந்து அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இவ்வாண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்பை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.