தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் : தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த மகன் !


ஜீப் வண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தையொருவர் ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியிருந்தது.

குறித்த குழுவினரால் மகனும் அமில வீச்சுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தையின் சடலத்தை பார்ப்பதற்காக மகன் இன்று (22) வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மாலை ஜீப் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்துக் கொண்டு குழுவொன்று பரகடுவ எஹெலியகொடவில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வந்துள்ளனர்.

வீட்டில் இருந்த இளைஞன் ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டு, கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல அந்த கும்பல் முற்பட்ட போது, ​​அவரது தந்தை அதனை தடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது, தந்தை ஜீப்பில் தொங்க முற்பட்ட நிலையில், ஜீப்பினை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த தந்தை மீது ஜீப் வண்டியின் சில்லுகள் ஏறியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடத்தப்பட்ட மகன் காயங்களுடன் வீதியில் விட்டுக் செல்லப்பட்டுள்ளதோடு, உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.