கல்லடியில் திருட்டு சம்பவம் தொடர்பில் கணவன் , மனைவி கைது


(ரீ.எல்.ஜவ்பர்கான்)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவன்,மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்

கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்கு சென்ற நிலையில் தனது கணக்கில் இருந்து 13000 ரூபாய்க்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக குறுஞ்செய்தியொன்று வந்ததையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரிலிருந்த தங்க நகைகள் , ஏ.டி.எம் அட்டை என்பன திருடபட்டுள்ளமை அறிய முடிந்துள்ளது

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட விசாரணையின் போது வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த தம்பதியினர் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த தங்க பாதையைத் திருடி மட்டக்களப்பு நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் 2,60 000 ரூபாய்க்கு விற்பனை செய்து வீட்டிலிருந்த ஏ.டி.எம் அட்டையையும் திருடி அருகிலுள்ள பூட் சிட்டி ஒன்றில் 13,000 ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்துன்னமை தெரியவந்துள்ளது.

மேற்படி பல்பொருள் பூட் சிட்டியின் சிசிடிவி கேமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் ஏ.டி.எம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன .

மேலும் , இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்