புலமைப்பரிசில் பரீட்சை: சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு !



தரம் ஐந்து, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி, முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் உத்தரவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால், ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லையென்ற, நிபுணர் குழுவின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னதாக தெரிவித்தார்.

எனினும், இக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு சுயாதீன குழுவைப் பிரதமர் அண்மையில் நியமித்திருந்தார்.

இக்குழுவின் அறிக்கையே பிரதமரிடம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அதேநேரம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முடியும் வரை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கக் கூடாது எனக் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.