மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேடையில் - ஊழலிற்கு அரசியல்வாதிகளை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என மைத்திரி கருத்து !





இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஊழல் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்த தமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேன சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நேர்மை காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாடு ஒன்றின் தலைவர் ஆட்சியாளர் சிறந்தவராகயிருப்பதால் மாத்திரம் நாடு முன்னேற முடியாது, பிரதமரும் அமைச்சரவையும் சிறப்பானதாக காணப்படவேண்டும்.ஊழல் மோசடிகளிற்கு இடமளிக்க கூடாது.கடந்த 74 வருடங்களாக நாட்டில் காணப்படும் ஊழலிற்கு அரசியல்வாதிகளே காரணம் என சிலர் தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,நான் இதனை முற்றாக நிராகரிக்கின்றேன்.

அரசியல்வாதிகளிற்கும் ஆரம்பத்திலிருந்து பயிற்சிகளை வழங்கவேண்டும்.அமைச்சரவை செயலாளர் முதல் ஜனாதிபதியின் செயலாளர் வரை அனைவருக்கும் பயிற்சி வழங்கவேண்டும்.

சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதில் மக்களும் பங்களிப்பு செய்யவேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.