கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞன் பலி, ஒருவர் படுகாயம் !


இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பண்டாரகம வேவிட்ட தெம்பிலிகொட்டுவ சந்திக்கு அருகில் உள்ள மரத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, மேற்கு பகுதியைச் சேர்ந்த லஹிரு நிமந்த ஜயதிலக என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பண்டாரகம - களுத்துறை வீதியில் மொரந்துடுவ திசை நோக்கி பயணித்த போது, ​​தெம்பிலிகொட்டுவ சந்திக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சாரதியான 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பண்டாரகம ரொட்டரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (08) இரவு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் உடைந்ததுள்ளதுடன் மரமும் சேதமடைந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் பிரேதப் பரிசோதனை இன்று (09) ஹொரணை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.