கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி பெற்றுக் கொண்ட 5 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி !



களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குருவத்தோட்ட வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும், ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

மில்லனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று வந்து குறித்த பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 26 மாணவிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர், சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டடுள்ளது.

இதனால், மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் ஒவ்வாமைக்கு உள்ளான மாணவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவர்களுக்கு பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையின் விடுதி இலக்கம் 6 இல் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரண வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

பாதிப்புக்குள்ளான அனைத்து மாணவர்களும் வெனிவேல்பிட்டியில் வசிப்பவர்கள்.

சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பொதுவாக மனித பாப்பிலோமா வைரஸுடன் (HPV) தொடர்புடையது, இது பிறப்புறுப்பு, வாய்வழி அல்லது குத வெளிப்பாடு மற்றும் தோலில் இருந்து தோல் தொடர்பு மூலம் பாலியல் ரீதியாக மாற்றப்படும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது, ஆனால் HPV தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.