முன்னாள் அமைச்சர் பந்துல உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு !



வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் “மக நெகும” நிறுவனம் சட்டத்தை மீறி 2k எனப்படும் நிர்மாணத்துறை நிறுவனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை செலுத்துவதைத் தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உரிய கொடுப்பனவை அனுமதிக்காத அடிப்படையில், மக நெகும நிர்வாக சபையை கலைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிராக, கடந்த (24) அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிர்மாணத்துறை நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணம் செலுத்தப்பட்டுள்ள போதும் மேலும் 150 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு முன்னாள் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ள தாகவும் இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள், பணிப்பாளர் சபைக்கு அறிவித்து விடயங்களை முன்வைத்திருந்தனர். இதன்படி இத்தொகையை செலுத்துவதில்லையென வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பதில் தலைவராக பதவியேற்ற அப்போதைய அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபையை கலைத்துள்ளார்.

பணம் செலுத்துவதற்கு ஆட்சேபனையின் அடிப்படையில், பணிப்பாளர்கள் சபை கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மக நெகும நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் விக்கிரம அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார், அந்த மனு யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேக்கர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, அடுத்த விசாரணைத் திகதி வரை, இக் கொடுப்பன வுகளை இடைநிறுத்தவும், முன்னைய நிலைமையை மாற்றாமல் உரிய பதவிகளை அதே முறையில் பராமரிக்கவும் பொறுப்பான தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுவை அடுத்த ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

‘மக நெகும’வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் விக்கிரமவினால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, அமைச்சின் செயலாளர், சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் இங்கு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரனவும், “மக நெகும” நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தரவும் ஆஜராகியிருந்தனர்.