ஜனாதிபதி ரணில் பங்கேற்ற மட்டக்களப்பு பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இளைஞர் கைது !



மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்தவேளையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த 22 வயது கடற்றொழிலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் பலர் வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந்த இளைஞரும் வாகரை பிரதேசத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஒருவரே ஆவார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எவ்வித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.