மூன்று பிள்ளைகளின் தாய் ​​வீட்டுக்குள் சடலமாக மீட்பு !


நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் தனது தாயார் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு அவரது மகன் அயல் வீட்டு நபருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த நபர் குறித்த வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததுடன் வீட்டினுள் துர்நாற்றம் வீசியமையால் சம்பவம் தொடர்பில் நான்னெரிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில், பொலிஸார் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ​​வீட்டுக்குள் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நான்னேரியா, பயிரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இது ஒரு கொலை என்றும் தெரியவந்தது.

சடலத்தின் அருகே ஒரு கோடரியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் இரண்டு மகள்கள் மற்றும் மகன் வீட்டில் இருந்து வௌியேறி வேலை பார்த்து வருவதாகவும், உயிரிழந்த பெண் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.