உரிய வேளையில் கட்டணம் செலுத்த தவறின் மின் துண்டிப்பு !



மின்சார பாவனைக்கான மாதாந்த மின்பட்டியல் கட்டண விபரம் பாவனையாளர்களின் கையடக்க தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் 30 நாட்களின் பின் மின் கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் பட்டியல் நிலுவைக்காக 1.5 சதவீத வட்டி பட்டியலில் பற்று வைக்கப்படும். இது தொடர்பாக பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் உடனுக்குடன் அனுப்பப்படுமென, கல்முனை பிராந்திய பிரதம மின்சார பொறியியலாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் மின்சார பட்டியல் கிடைத்து 30 நாட்களின் பின்னர் 10 நாள் காலக்கெடு வழங்கிய பின்னரும் கூட உரிய நேரத்தில் மின்சார கட்டணத்தை செலுத்த தவறினால் அதன் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார பாவனையாளர்களின மாதாந்த கட்டண அறவீடு மின்சார சபையின் சட்ட திட்டத்துக்கமையவே மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் கூறினார்.

கவனக்குறைவாக இருந்து மின் துண்டிக்கப்பட்ட பின்னர் அலுவலகத்துக்கு வருகை தந்து நிலுவையையும் இடைநிறுத்தல் கட்டணத்தையும் செலுத்துவது கவலைக்கு உரியதெனவும், அப்பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.