பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது !


கறுவாத்தோட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கறுவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிள் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டியை நிறுத்தி போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் வழக்குப் பதிவு செய்ய முற்பட்டபோது தண்டப்பணம் விதிக்க வேண்டாம் எனக் கூறி 1000 ரூபா லஞ்சம் கொடுக்க முற்பட்ட சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

மேலும், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.