மட்டக்களப்பு – வந்தாறுமூலை ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்திய குடும்பஸ்தர் பலி !






ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்திய இளம் குடும்பஸ்தர் மீது ரயில் மோதியதில் குறித்த நபர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பாக்கியராசா பிரசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற ரயிலே மோதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பிலிருந்து அதிகாலை புறப்பட்ட ரயில் வந்தாறுமூலையில் நிறுத்தப்பட்டதுடன், கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயில் வாழைச்சேனை ரயில் நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டது.

மரண விசாணை நடைபெற்றதையடுத்து சுமார் நான்கு மணித்தியாலத்தின் பின்னரே அப்பாதையில் ரயில்கள் பயணித்தன. மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியிலுள்ள அவரது தாயின் வீட்டிற்கு சென்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துண்டுதுண்டாகச் சிதறிய உடலை அவரது குடும்ப உறவினர்கள் அடையாளங்காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.