கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறையினால் செயற்படுத்தப்பட்ட பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டம்

(சித்தா)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICLஇணைந்து ஆசிய - பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUBநிதி அனுசரணையுடன் செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) நிறைவு விழா 02.07.2024 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இவ் விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபர் திருமதி.சு.ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் கலாநிதி. த.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

புவியியற்துறையின் தலைவரும் செயற்திட்ட இணைப்பாளருமான திருமதி. தவப்பிரபா சச்சிதானந்தம்; வரவேற்புரை மற்றும் தலைமையுரையினை  நிகழ்த்தி விழாவினை ஆரம்பித்து வைக்க கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL)  பணிப்பாளர் இந்நிகழ்விற்கான ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் செயற்திட்டத்தினுடைய செயற்பாடுகள், அது கடந்து வந்த பாதை என்பவை தொடர்பான அனைத்து விடயங்களையும் புவியியற் துறையின் பேராசிரியர் கந்தையா ராஜேந்திரம் எடுத்துரைத்தார்.

இந்த செயற்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 39 கிராம நிலதாரி பிரிவுகளுக்கும் நவீன தொழிநுட்பத்தினை உள்ளடக்கிய open street map  ஊடாக தயாரிக்கப்பட்ட படங்கள் (Map) மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய படங்கள் (Map) மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் என்பன இந் நவீன தொழிநுட்பத்தினூடாக படமாக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. 

அத்துடன் இந்த செயற்திட்டத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய தொகுப்பு, Open Street Map  சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய சஞ்சிகை, GeoMapVistaEUSL என்ற வலையத்தளம் ஆகியன இந்நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்டமையும் சிறப்புக்குரிய விடமாகும்.

இச்செயற்திட்டத்தினூடாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்களான நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், நகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு Open Street Map  ஊடாக படங்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களான சப்ரகமுவப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்டப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள மாணவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்குமான பயிற்சிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற் துறையினால் நடாத்தப்பட்டிருந்தது. இம்முன்னணி பல்கலைக்கழகங்களிலிருந்து பயிற்சியை பெற்றுக்கொண்ட மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்பட்ட பயிற்சி தொடர்பான கருத்துக்களை இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இப் பயிற்சியை முன்னெடுத்த புவியியற் துறையினையும், கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் பாராட்டியிருந்தனர். இந்தப் பயிற்சியை பெற்றுக் கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள், இப் பயிற்சியை பெற்றுக் கொண்டதனூடாகப் படங்களைத் தயாரித்து உயர் பங்களிப்பினை வழங்கிய (High contributor மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த பரிசில்களை பெற்றுக்கொள்ள பயிற்சி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபர் அவர்கள் இச்செயற்திட்டத்தினூடாக சமூகத்திற்கு வழங்கிய உன்னதமான சேவையையிட்டு புவியியல் துறையின் தலைவர் உட்பட புவியியல் துறையில் இச் செயற்திட்டத்தினை முன்னெடுத்த அனைவரையும் பாராட்டியதுடன் இதனை வழிநடாத்திய உபவேந்தர், கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL பணிப்பாளரையும் ஏனைய நிர்வாகிகளையும் பாராட்டியிருந்தார். இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் புவியியற்துறையினால் செயற்படுத்தப்பட்ட முக்கியமான மைல்கல் நிகழ்வாக அமைந்திருந்தது.