காரினை நிறுத்தி பணம், வாகனப் பதிவுப் புத்தகம் கொள்ளை - பொலிஸ் சார்ஜென்ட் கைது !


நீர்கொழும்பு பகுதியில் பயணித்த காரொன்றினை நிறுத்தி 02 இலட்சம் ரூபா பணம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளை சம்பவம் நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.